Saturday, October 5, 2013


சிவமயம்

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில்

சங்கரன்கோவில்

 ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீகோமதியம்பிகை
என்ற 

ஆவுடையம்மன்

              திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

சங்கரநயினார் கோவில் என்னுந் திருநகரில்

திருக்கோயில் கொண்டிருக்கும்

ஸ்ரீ கோமதியம்மைக்குச்

சாத்தப்பட்ட

கோமதி சதரத்ந மாலை

இந்நூலை யாக்கியவர்
திருநெல்வேலிப் பேட்டை
சித்தாந்த பண்டித பூஷணம்
திரு ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள்

இது

மதுரை

பிரிண்டெக் அச்சகத்தில் அச்சானது

திருக்கோயில் வெளியீடு

1995                                       ரூ.5.00






சிவமயம்

திருச்சிற்றம்பலம்

முதல் பதிப்பின் ஆசியுரை:

பழநி காசிவாசி சித்தாந்த சரபம்

மஹாமஹோபாத்யாய சிவாகம ஞானபாநு


ஈசான சிவாசார்ய சுவாமிகள்


15-6-1958


   'கோமதி சதரத்ந மாலை" என்ற இவ்வரிய பெயரிய நூல் சங்கரன்கோவில்
ஸ்ரீசங்கரனார்.  பங்கிலுறை "கோமதியம்பிகை"யின் திருவருட்பேறு குறித்து.
நம், நற்றவத்திரு - சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
அவர்களால் பாடப்பட்டது.  இது இனிய செந்தமிழ்ப்பா, ஒரு நூற்றானமைந்தது,
அரிய பல நீதிகளை நெறிப்படுத்து விளக்குவது.

பயனில் சொல் பாராட்டாப் பாவலரால் தொடுக்கப் பட்டதாதலின் ஒவ்வொரு பாடலிலும் பலப்பல உண்மைகள் தெரித்துணர்த்தப் பட்டுப் பல விபரீதவுணர்வுகள் களையப்பட்டு முள்ளன, புறச்சமயங்களை, களையும் இந்த தீரர் இன்று இந்நூலில், எந்தச் சமயத்துக்கும், எந்தச் சமயத்தாருக்கும் ஒவ்வாத பலவீபரீத உணர்ச்சிகளைக் கண்டித்திருப்பது தத்தமக்குரிய எல்லையிலே நிற்கும் சோபான பக்ஷங்களாகிய சமயங்களின் பேரரசாகிய சித்தாந்த சமயத்தின் அத்யுன்னத மகிமாதிசயங்களை நெறிப்பட விளக்கி, சித்தாந்த சைவர்களை வழிப்படுத்துவதாகும்.  "சூதன் ஒலி மாலை" என்று போற்றப்படும் சிறப்பினையுடையது.  "சிறப்புடைய புராணங்கள்" இவை ஆகமமாகிய கிரிமத்தியினின்றும் பிரவகித்த அமிருதவர்சஷங்கள் என்று
மகாஸ்காந்தம் தன்னைப் புலப்படுத்திக் கொண்டு எழுந்தது. அவற்றின்
வழித்தானவை அந்தந்த க்ஷேத்ர புராணங்கள்.  அவை வைதிக சைவக் செந்நெறி  பிறழாத மநுவந்தரங்களில் வாழ்ந்தோர் சிவோபாசனை செய்துய்ந்த வரலாறு கூறுமாற்றால் தொன்மை மிக்கது.  அது தொன்மையது.  இதனால் புராணமாகும். வேதம்போல் சிவாகமம் பிராமாணியமானது.  வேதார்த்தம் சிவாகமத்தால் அருளாசான் உணர்த்த, உணரப்படும்.  வேதத்தில் சூசிக்கப்படும் பொருள்கள் சிவாகமத்திலே சாங்கோ பாங்கமாக விரித்து அருளப்படுதலினாலும் வேதசாரமான பொருள்களை பொது நீக்கி விளக்கஞ் செய்தலினாலும் வேதத்தில் மாபாடியம் போன்ற தெனவும் கூறுவர்.  வேதம் பொது, சிவாகமம் சிறப்பு, வேதசாரம் சிவாகமம் என்பதே சைவ
நியமனம்.  உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் இப்பொருட்டு, என்னை?
உலகுஈண்டு உயர்ந்தோர்.  அவராவார் மறுவிலா வைதிக சைவர்.  வேத சிரப்பொருளை மிகத் தெளிந்தோரே என்பது நன்கு தெளிதல் வேண்டும்.  அங்ஙனம் தெளிதற்கு உறுதுணையானவை புராணங்கள்; இதிகாச புராணங்களைக் கொண்டு வேதப் பொருளையறிய வேண்டுமென்பது ஆன்றோர் நியமனமாகும்.  இதுபற்றியே எங்கள் அருணந்திசிவம்
சிறப்புடைய புராணங்களுணர்ந்து(ம்) வேத சிரப்பொருளை (மிகத்) தெளிந்தும்
என்று அருளி, வேத சிரப்பொருளைத் தெளிதரற்குப் புராணங்கள் சோபானமும் சாதன சாத்யங்களா மாற்றையும் நன்கு தெரித்தருளியதூஉ மென்க.
 
   அத்தகைய புராணங்கள் சைவ சித்தாந்த வாய்மையைத்தூல சூக்கும
முறையானுணர்த்துப் போந்தவை.  இவற்றின் வழித்தானவை அந்தந்த க்ஷேத்ர புராணங்கள்.   இத்துணைப் புராணங்களுக்குச் சித்தாந்த சைவச் செந்நெறியாளரே பொருள்கூற வல்லுநராவர்.  இப்படியால் இதுவன்றித் துப்புரவில்லா ரறிவு கொண்டு புராணங்களுக்குப் பொருள் காணுதல் சைவ சம்பிரதாயத்துக்கும் மாறானதாகும்.

    சங்கரன்கோவில் தலவரலாறு சைவ சம்பிரதாயியாகிய நமது பண்டிதரவர்களாலே நன்கு தெளிவு செய்யப்பட்டு, நம்மவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்துமாறு கோமதித்தாயைப் பிரார்த்தித்துத் தெளிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் சிறந்த நீதி, சைவ வாய்மை, புறச்சமய நிராகரணம், சுவமதத் தாபனம், சிவாபின்னையாகிய பராசத்தியாம் கோமதித்தாயின் திருவருள் வல்லபம், அவ்வன்னையின் அருட்பேறு என்று இன்னோரன்ன நலன்கள் செறிந்து நூறு பாடல்களும் நூறு ரத்னங்களாகத் திகழ்கின்றன.  இவ்வரிய நூல் ஸ்ரீகோமதியம்மை திருவருட்டிறம் நன்கினிது தெரித்து விளக்குவது ஆசிரியரின் பிரார்த்தனை அம்மை திருவடியைச் சேர்த்து அம்மை திருவருள் சுரக்க.

    இந்நூலாசிரியருடைய தொண்டு சைவத் தொண்டு.  இவர் கருத்து,
புறச்சமயங்களை களைதலினும், சைவ வான்பயிர் வளர்ந்தோங்குமாறு அவ்வப்போது ஆவன செய்தலினுமே பன்னெடுங்காலமாகப் பதிந்து கிடக்கின்றது.  ஆதலின் இவர் சைவ,  நற்கருத்தை வளர்த்தல் சைவத்தை வளர்ப்பதாகும்.  சென்னிமலை, சிரகிரி மேய சிவகுகப் பெருமான் திருவருளால் உலகமெல்லாம் மேன்மை கொள் சைவநீதி விளங்குக.
                    உ
        திருச்சிற்றம்பலம்
    ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

 கோமதியம்மை
 
    கோமதி சதரத்ந மாலை
 
    காப்பு

    சங்கரன் கோயிலமர் சங்கர லிங்கனார்
    பங்கிலுறு கோமதித்தாய் பாதமலர் - பொங்கு தமிழ்
    யாப்பாலிங் கேத்துவேன் யானைமுகத் தெய்வமே
    காப்பாக வுன்பொற் கழல்.

    நூல்

    பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி
    யாரணமே யாகமமே யருடருநூ லதிற்சுரக்குஞ்
    சாரமதே சைவமெனுஞ் சற்சமய மெனநாயேன்
    றேரவருள் செய்தனையே சீராசைக் கோமதியே.                   1

    கதிரோனின் புதிநேர்வன் கதிர்நேர்வை நீயன்றோ
    மதிவாணர் போல்வருனை மாயையென்ப ரதனாலுன்
    பதியரைச் சடமெனவும் பகராமற் பகர்வாரா
    யதிசோக முறுவரந்தோ வருண்ஞான கோமதியே.                2

    ஊனுடலே யுயிராகு முலகேவீ டாகுமெனு
    மீனமதிக் கிரையாய்நா னிறவாமு னின்றாளில்
    யான்றவென் றலைசார்த்தி யின்பாரு நாளுளதோ
    கானமரு மென்கூந்தற் கலியாணி கோமதியே.                         3

    ஆங்கிலமே திராவிடமே யாரியமே யாம்பலவும்
    பாங்குபெறக் கற்றாலும் பயனென்கொல் சுமையன்றே
    தேங்கமழுன் சீபாதஞ் சிந்திக்கக் கற்பதொன்றே
    யோங்குநல மென்றுரைத்தா யுலகளிக்குங் கோமதியே.       4

    என்னன்னை தந்தையன்பா லென்னுடலை வளர்த்ததுபோற்
    பொன்னன்ன நின்சீரைப் புரிந்துரைக்குந் திறலினையு
    நன்னரிவண் வளர்த்திட்டார் நான்செயுங்கைம் மாறுளதோ
    வென்னுளமு மெவருளமு மிருந்தாளுங் கோமதியே.             5

    ஆண்டறுப் தாகவெனை யாதரித்த வாறேபோல்
    வேண்டுவன தந்தின்னு மேதினியிற் காவாயோ
    பூண்டவிரும் வடிவாளே புந்தியிலே னஞ்சுகிறேன்
    றாண்டரிய பிறப்பறுக்குந் தனியமுதாங் கோமதியே.              6

    புத்திரபுத் திரிமாரும் பொருளாக வேண்டுமெனி
    வத்தனையும் புண்ணியநா னாற்றிடுதல் வேண்டாவோ
    வித்தனையு மல்வறந்தா னியற்றியிலே னையோநா
    னெத்தனையுங் கீழெனினு மெனக்கிரங்கு கோமதியே.            7

    பலகலைகள் கற்றாலென் பகுத்தறிவு பெற்றாலென்
    னுலகநடை சிறந்தாலெ னுபகாரம் புரிந்தாலென்
    மலமுழுது நீங்கியின்ப மருவுவதை வேண்டாத
    கலதிகளுக் குயிருளதோ கட்டழகி கோமதியே.                          8

    பீடேறுன் பொருட்புகழைப் பேசி மகிழ் தேத்தாத
    நாடேதான் மொழியேதா நவினூறான் மானுடந்தான்
    காடேயாஞ் சலசலபாங் கடிநூலாம் விலங்கேயா
    மீடேயோ வெடுப்பேயோ வில்லாத கோமதியே.                        9

    அணியாருள் விழாநாளி லலங்காரம் பலகொண்டு
    மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்காற்
    பணியாத தலைபணியும் பாடாத வாய்பாடுந்
    தணியாத சிந்தையுந்தான் றணிந்தொடுங்குங் கோமதியே.    10

    சிவபூசை யென்முன்னோர் செய்பயனா னாயேனு
    மவமேநாள் போக்காமே யானமட்டி னின்புகழைத்
    தவறாமே படித்திடுவேன் சாற்றிடுவே னெழுதிடுவே
    னுவமானங் கடந்தாளே யுயக்கொள்வாய் கோமதியே.            11

    தரித்திரமே யிடையூறாத் தரித்திரந்தா னீங்கிடிலோ
    திருத்தியுறத் தொழலாநின் சேவடியை யென்பாரா
    லருத்தமுளா ருனைமறந்திங் கரக்கரென வலைவதெனே
    யுருத்திரனா ருளமகலா வோவியமாங் கோமதியே.                  12

    புத்தழகி யானாலென் பொற்றுகில்பூ ணணிந்தாலென்
    வித்தையிலும் பதவியிலும் மிகுந்தாலென் கற்பிலதே
    லித்தரையிற் பேயவளே யெத்தகைய சிறப்பினனு
    மத்தகைய ளாவானு னடிமறந்தாற் கோமதியே.                            13

    யாதுபொரு ளியாருற்றா ரெதுவுமிலே னெதிர்காலஞ்
    சோதிடரோ துன்பமெனக் குண்டென்று சொல்கிறார்
    மாதரசி யுன்னேவல் வழிகிரக சஞ்சார
    மாதலினா லபயமெனக் களித்தருணீ கோமதியே.                         14

    பாலனெனக் குமரனெனப் பலபருவத் தனயருக்கு
    வாலமுதம் வெவ்வேறாய் வழங்குவணற் றாயதுதான்
    சீலமறும் வஞ்சகமோ சிறியேமுக் கவள்செயல்போற்
    சாலவரு ணீபுரித றானுமன்றோ கோமதியே.                                  15

    படங்காணப் போவாரே பரமசிவன் வீற்றிருக்குந்
    தடங்கோயில் சூழாரே தனிமுத்தி யிந்தாவென்
    றடங்கலுநீ யழைத்தாலு மபக்குவர்தான் வாங்குவரோ
    மடங்காதி நின்றார்க்கே வாய்ப்பதன்றோ கோமதியே.                16

    மதபேதமிருப்பதற்கு மானிடரி னறிவுபல
    விதமாவ தேயேது விளங்குனரு ளவர்க்கெல்லாம்
    பொதுவாகு மென் பதையே புகன்றந்தப் பேதத்தை
    மதியாத மதியுமொரு மதியாமோ கோமதியே.                               17

    பகவதியே மாதேவி பவானிபரா சத்திசிவை
    நகமகளே யைமவதி நாரணியே ஈசையே
    ககனமுயர் பிராமியுமை கெளரிதிரு வீசுரியே
    தகவுறுமிப் பெயர்களெற்குத் தாரகமாங் கோமதியே.                    18

    சொன்னாலும் வாயினிக்குஞ் சொலக்கேட்டாற் காதினிக்கும்
    பன்னாளுஞ் சிந்தித்தாற் பரந்தினிக்குஞ் சிந்தையெலாம்
    பொன்னாளுங் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்து
    மன்னாயுன் சரிதங்க ளற்புதமாங் கோமதியே.                                  19


    பேய்வாயிற் பட்டாரும் பித்துமிகப் பெற்றாரும்
    நோய்சால வுற்றாரு நுழைந்துனருட் சன்னிதியிற்
    றாய்நீயே சரணமெனத் தவங்கிடந்து சுகமுறுவார்
    வாய்மையிது முக்காலு மாண்புநிறை கோமதியே.                        20

    ஆறாது தத்துவமு மாகிநிற்கும் பேரருளே
    யாறாறு தத்துவமு மடக்கிநிற்கும் பேரொளியே
    யாறாறு தத்துவமு மலைத்திடவிங் குனைமறந்தே
    னாறாறுங் கடத்தியெனை யாட்கொள்வாய் கோமதியே.             21

    அறிந்திடுவாய் தானேநீ யறிவித்தா லறியுமுயி
    ரறிந்திடுவ வல்லபிற வறிவித்த போதேனு
    மறிந்திடுநர் செய்ந்நன்றி யயர்த்திலரே யாமாயி
    னறிந்திடுமா செய்தவுனை யயர்ப்பாரோ கோமதியே.                    22

    திருமேனி யுயிரென்னத் தேகமென விரண்டின்றி
    யொருஞானப் பிழம்பாவ துனக்குத்த முடலுயிர்போற்
    கருவாரும் புலையுடம்பிற் கட்டுண்ட வாசனையாற்
    றுருவாத ரதைக்கூறிச் சோகாப்பர் கோமதியே.                                23

    சிவபெருமா னின்கணவர் திருமானி னையரென்ப
    ரிவரிருவ ரொருதேவே யெனக்காட்டச் செய்தனையாந்
    தவமதனை யெனவயலார் சரிதமொன்று புனைந்திட்டா
    ரவமுனது பெண்மைக்க·தாகாதோ கோமதியே.                               24

    அரியொருகா லிருராம ரானான்சூர் பன்மனெனு
    மிருவரொரு சூரபன்ம னென்றானா ரவ்வரிபோ
    வரியரா வான்சிவனே யச்சூரன் பன்மன்போ
    வரியரரோ சிவனென்று மாகாரே கோமதியே.                                   25

     சங்கரநா ராயணன்பாற் சார்ந்திருக்கு நாரணன்றா
    னிங்குவரு வயிணவத்தி னிறையல்ல னவ்விறைக்குட்
    டங்கியதை யியக்குசிவ சத்திகொளு மாண்கோலந்
    துங்கமறை யவ்வாறு சொற்றிலதோ கோமதியே.                           26

    சங்கரநா ராயணனே தாணுமா லயனிவைதான்
    மங்கவறச் சிவநாம வரிசையிற்றான் வந்திடுமே
    சிங்கலிவாச் சிவன்சர்வ தேவமய னெனச்சுருதி
    யிங்கறிஞ ருளங்கொள்ள வேத்திலதோ கோமதியே.                     27

    நாரணனே யிலக்குமிசெய் நற்றவத்தா லவள்முன்னே
    நாரணசங் கரனாக நற்காட்சி தந்தானென்
    றாரணமோ நாரணற்கோ ராலயமோ சான்றுண்டா
    பூரணியே வளமாரும் புன்னைமகிழ் கோமதியே.                             28

    பரமசிவன் பத்தினியே பரந்தாமன் சோதரியே
    கரமுகவ னாறுமுகன் கனிந்தேத்து மாதாவே
    வரமுதவு நீறக்க மணியணிவா ருளக்கோயி
    றிரமுறவீற் றிருந்தருளுந் தெய்வமே கோமதியே.                          29

    தவவேடம் நீதாங்கிச் சங்கரனை யுளத்திருத்தி
    யுவமான மிறந்ததவ முஞற்றிநின்றா யுவந்தந்தச்
    சிவலோகன் களிறூர்ந்துன் றிருக்கணெதிர் காட்சிதர
    வவனோடு மகிழ்ந்துசென்றா யன்னம்போற் கோமதியே.            30

    அன்னியரும் போனார்நாட்டைந்ததுதானே ரசிந்நா
    டுன்னினிய பதமேத்தி யுய்வதுவே யினிவேண்டும்
    பொன்னதிகந் திரட்டியந்தப் பொன்னினையே போற்றியறந்
    தன்னைமறந் திருபாருந் தக்காரோ கோமதியே.                                31

    சத்தனிட மடங்குமவன் சத்தியெலா நீசிவனை
    நித்தமனு சரித்தனைநிருபித்தா யானாலுஞ்
    சத்தியுயர் வெனச்சத்தன் சத்திசம மெனப்பிதற்று
    மத்தருமிங் குளரானார் மறைகடந்த கோமதியே.                              32

    தீரமின்றித் திரமின்றிச் சிவபக்தி தனித்தின்றிச்
    சாரமின்றி வரம்பின்றிச் சாத்திரவா தாரமின்றிப்
    பாரமின்றிச் சைவத்தைப் பாலிப்பார் போற்சிலவ
    ரோமொன்றிக் குழறுபடை யுரைக்கின்றார் கோமதியே.                33

    நான்முகத்தன் றிருநெடுமா னல்லரனே யிந்திரனே
    வான்முகத்துப் பிறருமென்றும் வந்துனடி பணிகின்றார்
    நான்மிகுத்து னண்மலர்த்தா ணம்பாமே தம்முயிரை
    யூன்புகுத்தச் சாவாரிவ் வுலகுள்ளோர் கோமதியே.                           34

    அறம்பாவ மென்னுமிரண் டருங்கயிற்றா லிழுப்புண்டு
    புறம்போனே னுன்னடியைப் போற்றாம லிதுகாறுந்
    திறம்பாத பத்தியுமுன் றிருநோக்காற் கிடைப்பதன்றே
    பறம்பாமென் மனங்குழையப் பாராயோ கோமதியே.                       35

    உன்னாணைக் கடங்குகிலே னுன்புகழே பேசுகின்றே
    னென்னாமோ பயனதற்கென் றிரந்தேனு னறக்கருணைக்
    கன்னாய் நீ நட்டமர மாலமர மானாலு
    மின்னாத தென்றதனை யீர்குவையோ கோமதியே.                          36

    இருவிசும்பா ரசுரரைவென் றிருமாந்த போதவரை
    யொருதுரும்பா லோரியக்க னொடுக்கவவன் யாரென்று
    வெருவியவ ருனைவினவ விளங்கரனே யெனவிடுத்தாய்
    பெருகொளியே யிமவான்றன் பெருமகளாங் கோமதியே.             37

    மூவரையு முதிப்பித்தாய் மூவரைமுக் குணத்துறுத்தாய்
    மூவரையு மதிட்டித்தாய் மூவரையு மதிகரித்தாய்
    மூவரையு நியமித்தாய் முத்தொழிலி லென்றென்று
    மூவரையுந் தாட்படுத்தாய் முக்கணன்பாற் கோமதியே                  38

    பட்டாலோ பலனென்னும் பழமொழியைப் போன்றதுவே
    பட்டாலும் பலன்சிறிது மில்லையெனும் பழமொழியும்
    பட்டாலும் படவில்லை யானாலும் படரின்பம்
    பட்டாரின் பழவினையின் பயனன்றோ கோமதியே.                          39

    குடுமியினைக் கத்தரித்துக் குஞ்சியிலா ராய்த்தயிலந்
    தடவிவகுப் பெடுத்துப்பெண் டகச்சீப்பான் மயிர்சுருட்டி
    யிடபமெனத் திரிவதன்றி யினமலரிட் டேத்தாரு
    னடிசிலவ ரவர்வாழ்ந்திங் காம்பயனென் கோமதியே.                       40

    வானத்திற் பறந்தாவென் மண்மீது விரைந்தாவென்
    வானத்து வின்மனித்த வாழ்வெனுமெய் யுணர்ந்தார்க்கு
    ஞானத்து னாண்மலர்த்தா ணன்கேத்தித் தொழுவதுவே
    தேனொத்துத் தினந்தோறுந் தித்திக்குங்  கோமதியே.                         41

    உண்ணுவது முழைப்பதற்கே யுழைப்பதுவு முண்பதற்கென்
    றெண்ணிவசி மகன்விலங்கி னெவ்வகையிற் சிறந்திட்டா
    னுண்ணலுழைப் பிவற்றினுமு னுபயபத சேவையே
    மண்ணிலுயர் வென்றவன்றான் மதிப்பதென்றோ கோமதியே.      42

    தன்னியலை மாயாதுன் றனியருட்சீர் கேட்டலுமே
    யின்னுமவ ளருளாமை யென்னெனக்கென் றச்ச்சீரிற்
    றன்னதவ நம்பிக்கை சாற்றுபவன் மகனேயோ
    மன்னுமுயி ரனைத்தினுக்கும் வாழ்வருளுங் கோமதியே.               43

    ஈங்குறங்கி யாங்குறங்கா ரெய்திடுவ ரின்பமெலா
    மீங்குறங்கா தாங்குறங்கி னெய்திடுவர் துன்பமெலா
    மீங்குறங்கி யாங்குறங்கா விதநீயெ யெவ்வுயிர்க்கும்
    யாங்குமுறங் காமலிருந் தீயவலாய்  கோமதியே.                               44

     நன்றுதரு புதுமையென நானிலத்தி லொன்றுண்டோ
    வின்றியமை யாததென விரங்கியநீ யன்றன்றிங்
    கொன்றிவரு மனிதருக்கொல் வொன்றுதவ லோராம
    லின்றுபுது மைப்பித்தனே மாந்தான்  கோமதியே.                                 45

    துன்புதவுந் தீயவினை சுகமுதவு நல்லவினை
    யென்பதுவே நியதிசில ரீனவினை செய்துநுக
    ரின்பதனைக் கண்டுமதி யிழந்துமறஞ் செயமுந்து
    மன்பதையு மையையோ வாழ்வதுண்டோ கோமதியே.                    46

    மாதாமாண் கற்பிகழு மடமகன்போ லெவ்வுயிர்க்கு
    மாதாநீயென் பதனை மதியாரு முன்னையப
    வாதோதித் தம்மூத்தை வாய்நாற்றங் காட்டுகிறார்
    கோதேதோ வவருடல்வந்திடு குலத்திற்  கோமதியே.                        47

    கருக்குவது மவிப்பதுவுங் காய்ச்சுவதும் வறுப்பதுவு
    மெரிக்குளவெஞ் சூடொன்றே யிப்பெயர்கள் பெறுமாபோற்
    றிருக்கிளரு மொருநீயே செகசீவர்க் கருண்முறையி
    லிருக்குனையும் பலபெயரா லினிதேத்துங்  கோமதியே.                   48

    ஆண்டவனைக் கண்முன்காட் டவனையான் தொழுவேனென்
    றீண்டொருவன் பிதற்றுகிறா னென்புதிர நரம்பாதி
    யீண்டுடலி லவன்றன்னை யீதென்று காட்டுவனேல்
    மாண்டவவன் றன்னையும்யான் மதித்திடுவேன் கோமதியே.        49

     விரிந்ததிரி மலப்பிடிப்பை வெலமாட்டா திங்கேநான்
    தெரிந்து மிழி வினைபலவே செய்கின்றே னதனாலே
    பரிந்துபுரந் திடுவாயோ பராமுகமா யிருப்பாயோ
    வெரிந்துவரு நமனார்முன் யாதுசெய்வேன் கோமதியே.                   50

    மஞ்சளொடு மங்கிலியம் வாழ்வரசிக் கடையாள
    மஞ்சலிலு னடியாருக் கடையாளந்திருநீறு
    விஞ்சுபுக ழக்கமணி வெறுத்தவற்றை யுரைப்பவர்தந்
    நெஞ்சமதி லமங்கலமே நிலைகொள்ளுங்  கோமதியே.                     51

    பிறப்பதுதா னிறப்பதற்கோ பிறந்திடவே யிறக்கின்றா
    ரிறப்பதுவும் பிறப்பதுநீ யிரங்காதார் துயரன்றோ
    பிறப்பதனுக் குறுபயனாம் பிறவாமை யதையவர்தா
    னிறப்பதன்மு னெய்துவது னிச்சையன்றோ  கோமதியே.                  52

    எங்கிருந்து வந்தோமிங் கேன் வந்தோ மிறந்தபின
    ரெங்குறுவ மென்றாயா திழிவிலங்கொத் துண்டுறங்கி
    மங்குமதி யுடையரெலா மனம்போன படிதிரிந்துன்
    பொங்கருளுக் கயலாகிப் புதைகின்றார்  கோமதியே.                           53

    வழிவழியூ னுண்ணாத மரபினருட் சிலர·துண்
    டழிபவரின் கரவுரையா வதுகேட்டு னருண்மறுத்திங்
    கிழிவுவருந் தங்குலத்துக் கென்றுணரா தூர்சிரிக்கப்
    பழிபுலவுண் டிருணரகிற் பாய்வதெனே  கோமதியே.                            54

    உண்டுகொழுத் திடுவதற்கே யுடலெடுத்த பெரியார்கைக்
    கொண்டுசெயுஞ் சற்கருமங் குவலயத்தி லேதுமிலை
    யொண்டவநல் லுபவாசத் துடலொறுத்து னருள்சேர்ந்த
    தொண்டினரே யதுசெய்யுந் துப்புடையார்  கோமதியே.                        55

    உன்னருளின் றுணைகொண்டிங் குயர்மறையி னிதயத்து
    ளென்னுளதென் றாய்ந்ததனை யெடுக்குமறி வற்றொருவன்
    றன்னறிவி னிறுமாந்து தலைகழன்றச் சாத்திரத்துட்
    பின்னமுறு பொருள்புகுத்தல் பெட்பாமோ  கோமதியே.                      56

    பேரறிஞர் பலர்தந்தார் பெருநூல்கள் பலவவற்றாற்
    சீரடையுஞ் சிலர்நிற்கத் திருந்தாத பெரும்பாலார்
    காரணவு தம்மறிவைக் கலகலநூல் மலிந்திழுக்கத்
    தூரநெறி போனாருன் றுணையடிக்குக்  கோமதியே.                             57

    வேதமுன துரையென்னார் வீழ்வதுபொய் யுன்றாளி
    லேதுபய னிவற்றுடனு னியல்விளக்க வந்ததெனப்
    போதநிறை புண்ணியரப் பொன்னுரையைக் கொண்டுனது
    பாதமுளத் திருத்தியுறு பயன்பெறுவார்  கோமதியே.                             58

    மனமதெனைக் கருவீழ்த்த மகனானே னெஞ்சி நின்ற
    வினைநுகர யானீட்டு வினைபலவாம் வானோருக்
    கினியமுது வரநினைந்தே யிறப்பொழித்தான் பத்தினியே
    யெனையதுபோல் வினைநீக்கி யேன்று கொள்வாய் கோமதியே.     59

    பலபாவம் புரிந்தாலும் பாறைமனா நெகிழ்ந் தொருகா
    னலமாரு முன்னாம நாவார நவின்றிட்டா
    லிலவாகு மத்தனையு மெத்தனைதீட் டேனுமவை
    நிலமீதி லொருமுழுக்கா னீங்காவோ  கோமதியே.                                  60

    இருக்கையிலே மன்மதனா ரென்னுளத்தைக் கலக்கிடுவார்
    மரிக்கையிலே யெனைநமனார் வந்துகொடு போய்வதைப்பா
    ரிருக்கையிலு மரித்தபினு யித்துயரை யெனக்கின்றிப்
    பிரிக்கைசெயும் படைதானுள் பேரருளாங்  கோமதியே.                          61

    இன்னிசையு நாட்டியமு மின்றுவளர்ந்திட்டாலு
    மன்னரை யுன்னருளின் வழிநிறுத்தா திழிகாமப்
    புன்னசையிற் புரட்டலினாற் புன்விலங்கே யவரானா
    ரென்னபய னவைவேறிங் கீந்தனவோ  கோமதியே.                                  62

    சாத்திரத்தை யவமதித்துச் சரித்திரத்தை நம்பிநின்ற
    மாத்திரத்தே சிலசைவர் மதிவழங்கு பொருள்கோளிற்
    சாத்திரத்தை யனுசரித்த சரித்திரமே பொருளென்னு
    நேத்திரத்தை யிழந்துனரு ணீங்கிநின்றார்  கோமதியே.                           63

    சாதியெலா மொழிகசனர் சமமென்னும் பகுத்தறிஞர்
    வேதனையா முறையெல்லாம் விளிகவென்பார் மானமின்றி
    யாதிமக னிடத்தில்லை யாக்கினவ னிடையனென்ற
    வேதுவையவ் விரண்டற்கு மெடுத்துரைத்துக் கோமதியே.                     64

    கடவுளையே நிந்திக்கக் கயவருக்குப் பணங்கொடுத்துக்
    கடவுளையுங் கோயிலிற்போய்க் கைத்தொழுவர் சிலகபடர்
    மடமலியக் கபடரையுன் வன்கருணை மறத்தானீ
    யடவருநா ளென்செய்வா ரவரந்தோ  கோமதியே.                                        65

    பாசத்துக் கயலான பத்தியுளார் சித்தியுளார்
    நேசித்த மாமுனிவர் நீளின்ப முத்தியுளார்
    வாசித்துன் புகழ்பரப்பு மகநீயர் துறவுடையார்
    தேசத்துக் கென்றுமுள செல்வமிவர்  கோமதியே.                                         66

    ஆராய்ச்சி யனுபூதி யெனுமவற்று ளனுபூதிக்
    காராய்ச்சி யேதுவென்ப ரனுபூதி யில்லானு
    மாராய்ச்சி செய்தாலு னருளினொரு பான்மையவ
    னாராய்ச்சி கண்ணுக்கு மருவிருந்தாங்  கோமதியே.                                   67

    சதுமறையா கமந்தெளிந்து சைவநெறி கடைப்பிடித்து
    மதியரவ வேணியரன் வாமத்தா யுன்றாளை
    யெதுவரினு மறவாம லினிவருமென் குலத்தோரு
    மதிவலிபெற் றுய்ந்தேத்த வரந்தருவாய்  கோமதியே.                                 68

    வேற்றுமத தூடணையை விடுவதன்றி யம்மதத்தைப்
    போற்றுவதென் சைவனவன் புகழ்ந்துரைக்க வேண்டுவது
    னீற்றுநெறி யொன்றேயந் நெறிக்கற்பைத் துறந்தபினு
    மேற்றமவ னெய்துதற்கோ ரேதுவுண்டோ  கோமதியே.                             69

    ஏறுமிட மிறங்குமிட மெவ்வெவர்க்கும் வெவ்வேறா
    மேறினவ ரிறங்களவு மெவ்வூர்திப் பயணத்து
    மாறிலராய் மனமொத்து வதிந்திடுதல் போன்றதுவே
    கூறுலகி லெவ்வுயிரின் குடியிருப்புங் கோமதியே.                                       70

    சைவத்திற் சிலர்பிறந்தச் சமயநிந்தை புகல்வதுபோற்
    பொய்வைத்த சமயிகளும் புகலாரச் சிலருன்றன்
    மெய்வைத்த வருட்கயலாய் வெங்கலிவாய்ப் பட்டந்தச்
    சைவத்தைப் பழித்துயிரின் சார்பிழந்தார் கோமதியே.                                   71

    இத்தேச மெமக்கேயா மிதிற்பிறந்த வேதுவொன்றா
    லித்தால மப்படியே யெவ்வுயிர்க்கு முரித்தாகு
    மத்தாலெவ் வுயிர்க்குமிந்த வவனியிடத் துரிமையினை
    யெத்தாலும் பறிப்பதற்கிங் கியாமாரே கோமதியே.                                         72


    பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பரமசிவன் பரமபிதா
    பன்றிமுத லெவ்வுயிரும் பார்க்கிலுடன் பிறந்தனவாம்
    பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பார்முழுக்கப் பொதுவுடைமை
    பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பரிவுடையாய் கோமதியே.                              73

    பெற்றவனை யறியாத பிள்ளைக்குப் பிறப்புரிமை
    சற்றுமிலை பெற்றவளாற் சார்வதிலை திரிபுரத்தைச்
    செற்றவனே பெற்றவனிச் சீவரைய்· துணர்வார்க்கே
    பொற்றவுல கெல்லாமாம் பொதுவுடைமை கோமதியே.                             74

    உன்னருளைப் போற்றாருற்றுலகை யனுபவித்தல்
    மன்னுவிலங் கனுபவித்தன் மானுமுளத் தவ்வருளை
    யுன்னுபவர்க் கென்றேயில் வுலகுன்னாற் றரப்பட்ட
    தன்னதையீங் கறிவதன்றோ வறிவாகுங் கோமதியே.                                 75

    பொருளியலை யறிந்துள்ளம் புனிதமுற்று னருள்பெறவே
    பொருளுடைய ரில்லார்க்குப் பொருளீக வ·தன்றி
    யருளுளமே கொண்டவரை யாதரிக்கத் தாமுளராப்
    பொருளுடையர் செருகுவதிற் பொருளுண்டோ கோமதியே.                   76

    எப்பொருளுக் குள்ளேயு மீசுரனைக் காணென்ப
    ரப்படியே காண்பானுக் ககமுனைத்துத் தோன்றிடுமோ
    வப்பொருளும் புலனாமோ வக்காட்சிக் காம்பயனைச்
    செப்புவரோ வுன்னருளிற் றிளையாதோர் கோமதியே.                               77

    பொதுவென்றுஞ் சிறப்பென்றும் புகலுமிரண் டொழுக்கமுமே
    மதுவொன்றுன் மலர்த்தாளை வழிபடுவார்க் கவசியமா
    மதுவொன்றை யிதுவொன்றே யமையுமென வொழுகிடுவார்
    விதியொன்று மறியாமல் வீண்போவார் கோமதியே.                                   78

    கடவுளையிம் மனிதன்றான் கற்பனைசெய் தானென்று
    மடவருரைத் திடுவரந்த மனிதனெவ னெனவினவிற்
    றடவுவரால் விடையினையச் சார்வாகர் குழாம்பெருகி
    யிடவுலகைக் கவர்ந்திட்டா லேதமன்றோ கோமதியே.                               79

   யானைகண்ட குருடரென விருப்பனபுன் மதங்களெல்லாம்
   யானைகண்ட விழியனென விலங்குவதுன் சைவமொன்றே
   யானைகண்ட விழியனுண்மை யெடுத்துரைத்தா லவனைவைது
   யானைகண்ட குருடரெலா மெள்ளாரோ கோமதியே.                                     80

     உவமானப் போலிகளை யுரைத்தழிந்து சைவத்துக்
    கவமாவச் சமயிகளை யயலாக்கிக் கெடுக்கின்றார்
    சிவஞான போதாதி திராவிடமா பாடியமிங்
    கவராயா திருந்தானன் றறிகுவரோ கோமதியே.                                              81

    பரசமய நிராகரணம் பண்ணாமற் சைவத்தைத்
    திரமுறவிங் கெவர்தெளிவார் சீர்தூக்கு முறையாலே
    பரசமய நிராகரிப்பும் பண்ணிடுக பகையாலச்
    சிரமவினை புரிந்தாலே தீதென்றாய் கோமதியே.                                            82

    என்றென்று மெங்கெங்கு மெனதெந்த்ச் செய்கையிலு
    நன்றொன்று னாண்மலர்த்தா ணான்மறவா திருத்தற்காந்
    தொன்றொன்று புவிமீதிற் சுபுத்தியொன்று நல்குவையே
    குன்றொன்று குணமுடையார் குளிர்ந்தேத்துங் கோமதியே.                      83

    முப்பொருளி னியல்பறிந்தம் முப்பொருளின் சம்பந்த
    மிப்படியென் றளவைகளா லிருக்குவழி யாய்ந்துணர்ந்து
    செப்பமிகுந் தவரேயுன் றிருவருளிற் றம்மையிழந்
    தொப்பரிய கதிசேர்ந்தங் கோய்ந்திருப்பார் கோமதியே.                                84

    சிலரறிவன் பாதியவே தெய்வமென்பா ரவைகுணமே
    நலமுறுமக் குணியெதுவோ நல்லிறையா புல்லுயிரா
    வுலகவரை யேமாற்றி யொவ்வாத கோளுரைத்தா
    லலகையவ ரென்பதிலோ ரையமுண்டோ கோமதியே.                               85

    பிரமமெனும் பொருளொன்றே பெயர்தானே பலவென்னிற்
    பரமசிவ னெனும் பெயர்க்குப் பரந்தாமன் பொருளாமோ
    சரளமுறு நிகண்டருத்தந் தருகோசம் பயனிலவோ
    புரமெரியச் சிரித்தவனைப் போற்றிமகிழ் கோமதியே.                                  86

     சீராசை வரராசை திகழ்புன்னை கூழையெனும்
    பேராரிந் நகரத்துன் பெருங்கோயில் புகுந்துசுனை
    நீராடி நீறணிந்துன் சன்னிதியி னின்றன்பு
    பேராமல் வணங்காரும் பிறந்தாரோ கோமதியே.                                          87

     நரருக்கு நாட்டுக்கு நாஞ்செய்யு நற்பணியே
    பரனுக்காம் பணியென்பர் பாரரசின் கொடியேற்றி
    வரவேற்றிங் கரசினரை வழிபடலே னவ்வணக்கம்
    பரனுக்குஞ் செய்வதன்றோ பகுத்தறிவாங் கோமதியே.                              88


    பொல்லாரை வெறுத்திடற்க பொல்லாங்கை வெறுத்திடென்றா
    னல்லாரை விரும்பற்க நலத்தினையே விரும்பென்றாம்
    நல்லாரைப் பொல்லாரை நலந்தீங்குக் கயலென்றா
    னல்லாரை மதியாத நவைவருமே கோமதியே.                                              89

    தனிமனிதன் விடயமென்பர் சமயத்தை யதுசெல்லா
    தினமிலதேற்சிவசமயத் திருங்கோயில் பூசைவிழா
    தினவிரத மாசாரந் திருமறைநூ றிரவியங்க
    ளினிவருசந் ததியாதி யிருந்திடுகோ கோமதியே.                                         90

    கண்ணாடி யணிந்தாலுங் காண்பாரோ வந்தகரே
    மண்ணாடும் வாழ்விலக மகிழ்மாந்தர்க் கருமறைக
    டண்ணாரு னருட்சிறப்பைத் தகுமாற்றான் விரித்தாலு
    முண்ணாடி யவர்தெளியா துழலாரோ கோமதியே.                                      91


    விழிகாணும் பொருள்களெலா மேதினியி லழிவனவே
    வழிவேயாப் பொருளெவன்கட் ககப்பட்ட தின்றுவரை
    பழிதீருன் றிருவடியைப் பார்ப்பதற்கு னருளொன்றே
    விழியாகு மென்பதன்றோ மெய்யாகுங் கோமதியே.                                    92

    பெற்றவரும் பெறவில்லை பிறந்தவரும் பிறக்கவில்லை
    பெற்றவரைப் பெறுவித்தாய் பிறந்தவரைப் பிறப்பித்தாய்
    சிற்றுயிருக் கிதஞ்செயுமத் திருவிளையாட் டற்புதமே
    பற்றவுன் பதமடியேன் பற்றவருள் கோமதியே.                                              93


   மண்ணுலகிற் பெற்றவரான் மனைவியராற் புத்திரராற்
    கண்ணெனுநற் கல்வியினாற்கன தனத்தாற் பதவியினா
    னண்ணுசுக முன்னடிக்கீழ் நண்ணியிறு மாந்தவர்க்குத்
    தண்ணிலவிற் றருவினிழறருசுகமாங் கோமதியே.                                     94

    நிலையாமை தெரியாதார் நீணிலத்தி லெவருமில
    ரலையாமை யுளத்திருத்தி யன்புமுன்பாற் செய்யகிலார்
    நிலையாமை தனைநினைந்து நெஞ்சமுன தடியினிலை
    குலையாமை கூடும்வகை குறியாரோ கோமதியே.                                       95

    விதிநியம மெமக்காம்யாம் விளம்பதற்கா விலமெனநீ
    யுதவதனை மாற்றுசில ருலகிலெதற் கிருக்கின்றா
    ரதனையவ ரியம்புகவு னருள்பெறவென் றனரேலவ்
    விதிநியம மாற்றமவர் வேண்டுவரோ கோமதியே.                                        96

    ஒழுக்கத்துக் குறுபயனிவ் வுலகசுக மெனின்மிருக
    மொழுக்கமின்றி நுகர்ந்திலதோ வுலகசுக நீவகுத்த
    வொழுக்கத்துக் குறுபயனா முயர்ந்தவுல கதனைமறுத்
    தொழுக்கத்தைப் புகழ்பவர்பா லொழுக்கமுண்டோ கோமதியே.             97

    பொருட்செறிவுஞ் சொற்சுவையும் பொருத்தாமலிருந்தாலு
    மருட்செறிவை நீக்கியின்ப மன்னுயிர்கட் கீயுமுன
    தருட்செறிவை யேத்திலவோ வடியேன்செய் பாக்களெலா
    மிருட்செறிவோ டியன்மணமா ரெழிற்கூந்தற் கோமதியே.                        98

    தொழவேண்டு முனையென்றுந் தூமலர் தூஉய்ப் பாடியுன்மு
    னழவேண்டு முன்னடியி லடியற்ற மரமேபோல்
    விழவேண்டு மிவைசெய்துன் விளங்கருளிற் றிளைத்தாடி
    யெழவேண்டு மென்பதுவே யெனக்காசை கோமதியே.                               99

    தனமுயரக் கலைவளரச் சதாசார மிகநட்புக்
    கனியமழை பொழியவளங் கவியசிவ சற்சமயம்
    நனிபரவச் சீராசை நலம்பெறுகச் சங்கரனார்க்
    கனனியசிற் சத்தீநீயருள் புரிக கோமதியே                                                      100

                                                 
                          திருச்சிற்றம்பலம்

    கோமதி சதரத்ந மாலை முற்றிற்று.

    ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.
                                 உ
             சிவமயம்
    அருஞ்சொற் பொருள்
    பாடல்
         
      பொருள்
        
    01           ஆரணம் - வேதம், சீராசை - இத்தலப் பெயர்

    02         கதிரோன் - சூரியன், நின்பதி - சிவபெருமான், நேர்வன் - சமமாவன்,

                கதிர்-சூரியனின் ஒளி

    03        யான் அற - யான் என்னும் செருக்கு நீங்கும்படி, கான் - வாசனை
    05        புரிந்து - விரும்பி, நன்னர் - நன்றாக, இவண் - இங்கு
    06        பூண் தவிரும் - ஆபரணங்கள் விளங்குகின்ற புந்தியிலேன்

              அஞ்சுகிறேன்

            - புந்தியில் ஏன் அஞ்சுகிறேன் எனப் பிரித்துச் சிலே¨டை நயங்காண்க,
           
             புந்தி- புத்தி

    07     இத்தனையும் - சிறிதும், எத்தனையும் - எவ்வளவும்

    08      கலதி - மூதேவி

    09       பீடு ஏறு - பெருமை மிகுந்த, கடிநூல் - அரைஞாண், ஈடு - ஒப்பு,

             எடுப்பு - உயர்வு

    12         அருத்தம் - செல்வம்

    15         தனயர் - புத்திரர், வால் - தூய

    16         மடம் காதி - அறியாமையைத் தொலைத்து

    17         ஏது - காரணம்

    18         நகம் - மலை, ஐமவதி - ஹிமவான் மகள் (அது உமைக்கொரு பெயர்),

              ககனம் -ஆகாயம், எதற்கு - எனக்கு, தாரகம் - மந்திர விசேடம்

    21         ஆறாறு - முப்பத்தாறு

    22         தானே அறிபவள் அம்மை, அறிவித்தால் அறிவது உயிர்,

               அறிவித்தாலும்

              அறியாதது சடம், என்ற உண்மை இதில் காட்டப்பட்டது

    23         பிழம்பு - வடிவம், துர்வாதர் - வீண் வாதம் பேசுகின்றவர்

    24         ஐயர் - அண்ணன், அவம் - குறைவு

    25         அரி - விஷ்ணு, இருராமர் - தசரத ராமன், பரசுராமன், இவ்விருவரும்


விஷ்ணுவாகிய ஒருவருடைய இரண்டு அவதாரங்கள், அங்ஙனமே சிவன்

ஒருவனே சங்கரனும் நாராயணனுமாகக் காட்சி அளித்தான், சிவபெருமான்

கொண்ட மகேசுர மூர்த்தங்கனுள் ஹரியர்த்தர் என்னுந் திருமேனியே அது.

 சூரனும் பன்மனும் ஆகிய இரு அசுரர்கள் சூரபத்மன் என ஒரு வடிவங்

கொண்டனர்.  அதுபோல சிவனும் விஷ்ணுவுமாகிய இரு தெய்வங்கள்

சங்கரநாராயணரென ஒரு வடிவங் கொள்ளவில்லை.


இவை இச்செய்யுளின் கருத்து இதற்குப் பிரமாணம் சேரமான் பெருமாள்

நாயனார் அருளிய "இடமால்" என்று தொடங்கும் செய்யுள்.


    26         வைணவத்தின் இறை - வைணவ மதத்தில் வணங்கப்படும்

கடவுளாகிய விஷ்ணு.


அவ்விறை - அந்த விஷ்ணு ஆண்கோலம் - புருஷ வடிவம்.  இச்செய்யுளுக்குப்


பிரமாணம், "அரியலாற் றேவியில்லை யையனை யாறனார்க்கே" என்ற

தேவாரம், இறைவி  நின் கலைபேதத் தொன்றோங்குமா லெனவேதாவைத்  

தந்துபா ரொருங்கு தாங்கும்" என்ற பழனித்தல புராணம், "போகே பவாநீ

புருஷேஷ¤ விஷ்ணுக்ரோதேச காளீஸமரேச துர்க்கா" என்பன.

    27      சங்கரநாராயணன் - இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஒரு மூர்த்தி.

              தாணுமாலயன் - இவை சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மூவருக்கும்

              முறையேயுள்ள பெயர்களின் தொகுதி, சுசீந்திரத்தில்

              எழுந்தருளியிருக்கும்  சிவலிங்கப் பெருமானுக்குத் தாணுமாலயன்

             எனப் பெயராயிருந்து வருகிறது.

             சிங்கல் -கெடுதல், "சர்வ தேவமயச் சிவ:" என்றது தியானபிந்து

             உபநிஷத்.


    29         கரமுகவன் - கணபதி, திரம் - ஸ்திரம்


    31         தன்னரசு - சுதந்திரம்


    32         சத்தன் - சத்தியையுடையவன், அனுசரித்து - பிந்தொடர்ந்து,


                நிரூபித்தாய் - மெய்ப்பித்தாய், மத்தர் - பித்தர், மறைகடந்த - மறைக்கு


                அதீதமான, மறைகள் தந்த, மறைகள் (ஐத்) தந்த என்ற நயம் காண்க.


    33         பாரம் - பொறுப்பு, ஓரம் ஒன்றி - வஞ்சகத்திற் பொருந்தி


    34         வான்முகத்து - வானுலகிலுள்ள, நான்மிகுத்து - யான் என்னும்


                 செருக்கில் அழுந்தி, ஊன்புகுத்த - மீண்டும் பிறப்பினுட் செலுத்த


    35         பறம்பு - கல்


    36         ஆலம் - விஷம், ஈர்குவையோ - வெட்டித் தள்ளுவையோ


    37         விடுத்தாய் - விடை கூறினாய், இக்கதை கேனோபநிடதத்திலுள்ளது


    38         மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்


    39         படர் - துன்பம்


    41         வானத்துவில் - வானவில்


    42         வசி - வாழ்கின்ற


    43         ஆயாது - ஆராயாமல்


    44         ஈங்கு உறங்கி ஆங்கு உறங்கார் - இகத்தை மறந்து பரத்தில்


                வசப்பட்டவர், இதம் - நன்மை


    45         இங்கு ஒன்றி வரும் - இவ்வுலகில் பிறந்து வருகிற, ஏமாந்தான் -

                மகிழ்ந்தான்


    47         அபவாது - அபவாதம், பழி, கோது - குற்றம்


    49         என்பு - எலும்பு, ஈண்டு - கூடிய


    50         திரிமலம் - ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மும்மலங்கள்


    52         நீஇரங்காதார் - உன் கருணைக்கு இலக்கு ஆகாதவர்


    54         கரவுரை - வஞ்சப் பேச்சு, அதுவேட்டு - அவ்வூனை விரும்பி


    55         துப்பு - வலிமை


    56         பெட்பு - ஒழுங்கு


    57         கார் அணவு - மயக்கம் பொருந்திய, கலகல நூல் - உலக போக நூல்,

                தூர - வேறான


    58         பொய் - வேட மாத்திரை, ஏது பயன் - காரணமும் விளைவும்


    59         ஈட்டு - செய்கிற


    62         மன் நரரை - நெருங்கிய மக்களை, புல் நசை - இழிந்த உலக ஆசை,

               அவை - இசையும் நாட்டியமும்


    63       சாத்திரத்தை யனுசரித்தே சரித்திரங்கள் பிரமாணமாகும் என்பது


              இப்பாட்டின் கருத்து


    64     இடையன் - இடைக்காலத்து மனிதன், ஏது - காரணத்தை


    65     அட - துன்புறுத்த


    66     மகநீயர் - பெரியோர்


    67      பான்மை - பங்கு


    72      அத்தால் - அதனால், எத்தாலும் - எதனாலும்


    74      பொற்ற - பொன்போன்ற


    76      பொருள் - செல்வம்


    77      அகம் - நான் என்பது


    79      சார்வாகர் - நாத்திகர்


    81      நன்று - நன்மையை


    83      சுபுத்தி - நல்லபுத்தி


    89      நவை - குற்றம்

    98      மருள்செறிவு - அறியாமையின் கூட்டம்

    100     அனனிய - அன்னியமில்லாத, தாதாத்மியமான

0 comments:

Post a Comment