Thursday, October 15, 2015


கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் தனிக் கோயில் உண்டு.

சிதம்பரத்தில் தில்லைக் காளி கோயிலில், வீணையேந்தி நிற்கும் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு. கல்விக் கடவுளாக ஒரு பெண் தெய்வத்தை வணங் குவது மிகச் சிறப்பானது. அவளுக்கு என்று கோயில்கள் இல்லா விட்டாலும், இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே.

வாழ்நாளில் கூத்தனூருக்கு ஒரு முறை சென்று வந்தால், கல்வியும் ஞானமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம், காரைக்கால் மார்க்கத்தில் பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் சரஸ்வதி.

வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி.

ஒட்டக்கூத்தரின் ஊர்

பண்டைய தமிழ் இலக்கியத்தில் பெரும் புகழ் பெற்றவர் ஒட்டக்கூத்தர். கூத்தனூர் இவரது சொந்த ஊர் என்பதால் இவரது பெயருடன் அவ்வூரின் பெயர் இணைந்து ஒட்டக்கூத்தர் என்றானது என்பார்கள். மன்னன் ஒருவன் இவரது புலமையை மெச்சி இந்த ஊரைப் பரிசாக அளித்ததாகவும் கூறுவர்.

தற்போதும் இந்த ஊர் புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணம், இங்கு தனித்துக் கோயில் கொண்டுள்ள சரஸ்வதியே. இந்த சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். இந்தக் கோயிலில் பேனாக்களைக் கொண்டுவந்து சரஸ்வதியின் பாதங்களில் வைத்து வேண்டிச் செல்லும் வழக்கம் மாணவர்களிடையே இன்றும் உண்டு. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன் மாணவர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜைத் துளிகள்

# மனைப் பலகை ஒன்றில் மாக்கோலம் போட்டு, செம்மண் இட வேண்டும். பின்னர் அடுக்க வேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களுக்குச் சந்தனம், குங்குமம் இட வேண்டும். முதலில், நீண்ட புத்தகங்கள், நோட்டுக்கள் ஆகியவற்றை அடியில் வைக்க வேண்டும். அதற்கு மேல் சிறிய புத்தகம், நோட்டுக்களை வைத்து, அவை கீழே விழாமல் அடுக்க வேண்டும். நோட்டுப் புத்தகங்களே இங்கு சரஸ்வதியாகப் போற்றப்படுவதால், சரஸ்வதி படத்தை அவற்றின் மீது சாற்றி வைக்கலாம்.

# அறிவிற்குக் குருவாக விளங்குபவள் என்பதால் மஞ்சள் சாமந்திப் பூச்சரத்தை அப்படத்தின் மீது அழகாகச் சாற்ற வேண்டும். வெண்மைக்கு உரியவள் என்பதால் மணம் வீசும் மல்லிகைப் பூச்சரத்தையும் சாற்றலாம். அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு அருகே எழுது பொருள் உட்படக் கல்விக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (ஸ்கேல்), ஜியாமெண்டிரி பாக்ஸ் ஆகியவற்றை அடுக்க வேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், ஒவ்வொருவருடைய பொருளையும் பூஜையில் வைக்க வேண்டும். சரஸ்வதி பிரம்மனின் மனைவி, பிரம்மனோ நாராயணனின் நாபியில் தோன்றியவர். அதனால் சரஸ்வதிக்கு மாமனார் ஆகிறார் விஷ்ணு. அதனால் விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகிய புத்தகங்களையும், சரஸ்வதி பூஜையில் மேற்புறமாகவே வைக்க வேண்டும்.

# சுத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தால் அவற்றையும் அடுக்க வேண்டும். கிரிக்கெட் மட்டை, பந்து, கோலி, கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பொருட்களை அணிவகுத்து வைக்கலாம். இசை சம்பந்தப்பட்ட, சுருதிப் பெட்டி, வீணை, கிடார், மிருதங்கம், ஜால்ரா அகியவற்றைச் சந்தனம், குங்குமம் இட்டு அழகுற வைக்கலாம்.

# உதிரிப் பூக்கள் கொண்டு சரஸ்வதியின் புகழைப் பாட்டாகவோ, வார்த்தைகளாகவோ கூறிப் பூஜிக்க வேண்டும்.

# ’சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா’ என்ற துதியைச் சொல்லியும் சரஸ்வதியை வணங்கலாம். குளித்து முடித்துச் சுத்தமாக இருக்கும் குழந்தைகளை, சரஸ்வதியை நமஸ்கரிக்கச் செய்ய வேண்டும். அன்றைய தினம் படிக்கக் கூடாது என்பார்கள்.

# கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வெண் தாமரையாலோ அல்லது அதன் இதழ்களாலோ பூஜித்தல் அரிய பலன்களை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு. வெண்மை உடை உடுத்தி, வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். வெண் தாமரையில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கும் சரஸ்வதி அறிவினை அள்ளித் தருபவள். இத்தெய்வத்தைச் செந்தாமரை மலர்களாலும் அர்ச்சிக்கலாம். இதனால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதிகம்.

# பூஜையின் முடிவில் சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்துச் சமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் கருப்பு கொண்டைக் கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது மிகுந்த விசேஷத்தை அளிக்கும்

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment