Friday, January 10, 2014





அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று(ஜன.11) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வரும் ஜனவரி 17ம் தேதியும், தெப்பத்தேரோட்டம் வரும் ஜனவரி 20ம் தேதியும் நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனியில் வருடம் முழுக்க திருவிழா நடைபெற்றாலும் தைப்பூசத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.  பழனி தைப்பூசத் திருவிழாவின் போது தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, மயில் பீலிக்காவடி, மலர்க்காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து களைப்பு தீர ஆடிப்பாடி பாதயாத்திரையாக வருகின்றனர்.

பக்தர்கள் வருகையை முன்னிட்டு பல இடங்களில் பக்தர்கள் இளைப்பாறும் இடம், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அனைத்து நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.  இப்பெருமை மிக்க தைப்பூசத் திருவிழா வரும் இன்று (சனிக்கிழமை) பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடிக்கட்டி மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு விழாநாட்களில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி தினமும் தங்கமயில், தங்ககுதிரை, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தந்தசப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருள்கிறார். வரும் ஜனவரி 16ம் தேதி வியாழக்கிழமை இரவு 6.30 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது.

 தொடர்ந்து ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.4.5 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி திங்கள்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக இரவு தெப்பத்தேரோட்டமும், நள்ளிரவு திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.  விழாவை முன்னிட்டு விழா நாட்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை பாஸ்கரன்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள், அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

செய்தி : தினமணி

0 comments:

Post a Comment